
Dr குழந்தையன் KC மணி
மலேசிய மக்கள் தொகை நடப்பில் 32 மில்லியனாக உள்ளது!
நாடு முழுவதும் தனியார் வாகன பதிவு எண்ணிக்கையோ ஏறத்தாழ 31 மில்லியனைத் தொட்டுள்ளதாக, சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Dr குழந்தையன் KC மணி கூறினார்.
இதுவே நாட்டில் அண்மைய காலமாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குப் பிரதான காரணம் என அவர் தெரிவித்தார்.
"கோவிட் 19 காலகட்டத்தில் பொது மக்கள் தூர இடைவெளியைக் கடைப்பிடித்ததால், பொது வாகனங்களைக் காட்டிலும் தனியார் வாகனங்களில் பயணிப்பதையே விரும்பினர். அதே நடைமுறை அவர்களுக்குப் பழகிப் போய் விட்டது, எனவே சொந்த வாகனங்களில் பயணிப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்.

மேலும், கோவிட் 19 காலகட்டம் பண நெருக்கடி வித்திட்டது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில், தினசரி வாழ்க்கை செலவீனங்களைக் கவனிக்க ஒரு குடும்பத்திலிருந்து அதிகமானோர் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர்.
ஒரே விட்டில் இருவர் வேலைக்குச் செல்லும் பட்சத்தில் இரு வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற காரணங்களால் தான் கடந்த ஓரிரு மாதங்களாகவே சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது." என்றாரவர்.
பள்ளி பேருந்து துறையும் பாதிக்கப்பட்டது இந்நிலையில் காரணம் என்றும் Dr குழந்தையன் கூறினார்.
" வெகு காலமாகவே பள்ளிகள் மூடப்பட்டு, அதனால் பள்ளி பேருந்து நடத்துனர்கள் வருமானத்தை இழந்தனர். வேறு வேலையைத் தேடி சென்ற அவர்கள் இன்னமும் ஓட்டுனர் வேலைக்குத் திரும்பவில்லை.
இதனால் வேறு வழி இன்றி பெற்றோர்கள் பிள்ளைகளைத் தங்கள் வாகனங்களிலேயே பள்ளிக்கு அனுப்பி வரும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.
இத்தனை மாணவர்களுக்கு எத்தனை தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன? என அவர் கேட்டார்.
இவற்றை எல்லாம் தவிர்த்து, விருந்துபசரிப்பு, திறந்த இல்ல உப்சரிப்பு என நோன்பு பெருநாளுக்குப் பிந்தைய ஒரு மாத காலகட்டமும் மக்கள் நடமாட்டம் கூடியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண மக்கள் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்வதே சிறந்த வழி என்றாரவர்.
"பெருந்தொற்று சமயத்தில் எவ்வாறு இணையம் வாயிலாகவே பல்வேறு சேவைகளை நாடி வந்தீர்களோ அதையே தொடர்ந்து செய்யுங்கள்; கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வேலைகளை இணையத்திலேயே முடித்துக் கொள்ளுங்கள்." என்றார்

"மிக முக்கியமாக முதலாளிகள் அல்லரு நிறுவனங்கள்.19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமுல்படுத்திய வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறையைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.
அது உங்கள் நிறுவனத்திற்குத் தோதானதாக இருந்தால், உங்கள் நிறுவனத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால், Work From Home நடைமுறையை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்" என Dr குழந்தையன் கேட்டுக் கொண்டார்.
மோசமடைந்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கையாள தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியது மிக முக்கியம். முடிந்தளவு பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொது மக்களை வலியுறுத்துகிறார் Dr குழந்தையன். அது பயணிகளுக்குப் பாதுகாப்பான ஒன்றும் கூட என தெரிவித்த அவர்.
நாட்டில் கடந்தாண்டு பதிவான மரணத்தை உட்படுத்திய விபத்துகளில் 99 விழுக்காட்டுக்கும் அதிகமானவை தனியார் வாகனங்களை உட்படுத்தியவை தான்;
ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான விபத்தே பொது போக்குவரத்துகளை உட்படுத்தியது என்றார்.
நடமாட்டத்தைக் குறைக்காமல், அதிகமான நெடுஞ்சாலைகளைக் கட்டுவது போன்ற அணுகுமுறைகள் தற்காலிகமான தீர்வு மட்டுமே இருக்கும். எனவே முடிந்தளவு பயணத் தேவையைத் தான் குறைக்க வேண்டுமே தவிர, புதுப்புது நெடுஞ்சாலைகளைக் கட்டுவது, நாளடைவில் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துவிடும் என்றார் Dr குழந்தையன்.
நாட்டில் குறிப்பாக தலைநகரில் வாகன நெரிசல் மிக மோசமாகியுள்ளதை அடுத்து, அதனை தீர்க்க ஆக்ககர அணுகுமுறைகளைக் கையாளுமாறு பல்வேறு தரப்புகள் அரசாங்கத்தை கோரி வருகின்றன.
அது குறித்து ராகா செய்தி கேட்ட போது, இது அரசாங்கம் மட்டுமல்ல, பொது மக்களும் சேர்ந்து செயல்பட வேண்டிய விவகாரம் என Dr குழந்தையன் குறிப்பிட்டார்.
Dr குழந்தையனுடனான முழுமையான podcast-டை கேட்க கீழ்க்காணும் இணைப்பை சொடுக்கவும்:
ta.syok.my/podcast/episode/85167
By Thivyah Vegan John